/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்று பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்
/
ஆரணி ஆற்று பாலத்தில் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : டிச 07, 2024 01:37 AM

ஊத்துக்கோட்டை,ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் கடந்த, 2017ம் ஆண்டு 27.8 கோடி ரூபாயில் மத்திய சாலை நிதி திட்டத்தின் சார்பில், பாலம் கட்ட துவங்கி, 2021ம் ஆண்டு பணிகள் முடிந்து தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலம், 450 மீட்டர் துாரம், 15 மீட்டர் அகலத்தில் உள்ளது. இரண்டு பக்கமும், 1.5 மீட்டர் சாலை உள்ளது.
இதன் வழியே ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு செல்கின்றனர். தினமும், 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன.
இதேபோல், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம், சத்தியவேடு, தடா, காளஹஸ்தி, வரதயபாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இந்த பாலத்தை கடந்து ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றனர்.
இதில் பாலத்தின் சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில், இரும்பு சட்டம் வாயிலாக இணைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த பாலத்தில் இரண்டு இடங்களில் இந்த இரும்பு சட்டம் சேதம் அடைந்து உள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் செல்லும் வாகனங்ளால், இரும்பு சட்டம் முழுதும் சேதமாகி பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் சேதம் அடைந்த இரும்பு சட்டங்களை சீரமைத்து வருகின்றனர்.