/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் போடப்பட்ட புதிய நீர்த்தேக்க திட்டம்: சேமிக்க வழியிருந்தும் கண்டுகொள்ளாத அரசு
/
கிடப்பில் போடப்பட்ட புதிய நீர்த்தேக்க திட்டம்: சேமிக்க வழியிருந்தும் கண்டுகொள்ளாத அரசு
கிடப்பில் போடப்பட்ட புதிய நீர்த்தேக்க திட்டம்: சேமிக்க வழியிருந்தும் கண்டுகொள்ளாத அரசு
கிடப்பில் போடப்பட்ட புதிய நீர்த்தேக்க திட்டம்: சேமிக்க வழியிருந்தும் கண்டுகொள்ளாத அரசு
ADDED : ஜன 08, 2024 06:25 AM

கும்மிடிப்பூண்டி அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்தேக்கம் ஏற்படுத்தப்பட்டது.
அதன் உபரி நீர் பொம்மாஜிகுளம், செதில்பாக்கம், மாதர்பாக்கம், மாநெல்லுார் வழியாக ஒரு கால்வாயும், பூவலம்பேடு, ஈகுவார்பாளையம், பெரியஓபுளாபுரம், சாணாபுதுார், ஏடூர் வழியாக மறு கால்வாயும், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஏழு கண் பாலம் அருகே ஒன்று கூடுகிறது.
தடுப்பணை
அங்கிருந்து பழவேற்காடு ஏரி வழியாக உபரி நீர் கடலில் கலக்கிறது. இடைப்பட்ட கால்வாய் பகுதிகளில், தடுப்பணை இல்லாததால், ஆண்டு தோறும், 5 டி.எம்.சி., தண்ணீர் வரை கடலில் கலந்து வீணாகிறது.
கடலில் கலக்கும் தண்ணீரின் அளவை குறைக்கும் நோக்கில், எளாவூர் ஏழு கண் பாலம் அருகே, 190 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக அணைக்கட்டுடன் கூடிய நீர்தேக்கம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில், 200 மீட்டர் நீளத்திற்கு அணைக்கட்டு அமைத்து ஒரு டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க திட்ட வரைவு தயாரித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 19 துாண்கள் கொண்ட அணைக்கட்டும், அதன் கீழ் நீர்தேக்கத்தில் உப்புநீர் கலக்காமல் இருக்க ஏழு மீட்டர் ஆழத்திற்கு சுவர் அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.
எதிர்பார்ப்பு
விரைவில் ஒப்புதல் பெற்று, 2023ம் ஆண்டு கோடைக் காலத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2023ம் ஆண்டு மழைக்காலத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிணற்றில் போட்ட கல் போன்று நீர்தேக்க திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க வழி இருந்தும் அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நீர் வளத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடலில் கலக்கும் தண்ணீரின் அளவை குறைக்கும் வகையில், புதிய நீர்தேக்க திட்ட வரைவு தயாரித்து அனுப்பினோம். திட்டத்திற்கான வரை படம் தயாரிக்கும் பணி தற்போது உள்ளது. விரைவில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறோம்' என்றார்.