/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டு அருகே ஆறு வழிச்சாலை பணிகள் தீவிரம்
/
பள்ளிப்பட்டு அருகே ஆறு வழிச்சாலை பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 04, 2025 02:42 AM

பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக, ஆந்திர மாநிலம் சித்துார் வரை, 116 கி.மீ., துாரத்திற்கு அறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 10 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள், இரண்டு ரயில் மேம்பாலம் உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர 252 கணவாய்கள், 72 வாகன சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சித்துாரில் இருந்து 14.5 கி.மீ., துாரத்தில் பொன்னை நதியையும், 65.7 கி.மீ., துாரத்தில் நகரி அருகே கொசஸ்தலை ஆற்றயும் கடக்கிறது.
இந்த ஆறுவழி சாலை ஆந்திர மாநிலம், சித்துாரையும் திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு நேரடி இணைப்பு வழங்குகிறது.
சென்னை வெளிவட்ட சாலையில் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து அமைக்கப்பட்டு வரும் சென்னை - பெங்களூரு விரைவு சாலையுடன் சித்துார் அருகே கீடனம்பள்ளியில் இணைகிறது.
தச்சூர் - சித்துார் ஆறுவழி சாலைக்காக, தமிழகத்தில் 360.5 ஏக்கர் மற்றும் ஆந்திராவில், 525 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
பள்ளிப்பட்டு அடுத்த சாணாகுப்பம், வெங்கல்ராஜகுப்பம் பகுதியில் சாலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆறுவழி சாலை பயன்பாட்டிற்கு வரும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

