
திருவள்ளூர்:வீரராகவர் கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவில், தை பிரம்மோற்சவம், கடந்த, 24ல் துவங்கியது. தினமும் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆறாவது நாளான நேற்று, தை அமாவாசை தரிசனம் நடந்தது.
இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், நேற்று முன்தினம் இரவே, கோவில் வளாகத்திற்கு வந்து தங்கியிருந்தனர்.
நேற்று அதிகாலை, ஹிருதாபநாசினி குளக்கரையில், தங்கள் முன்னோருக்கு, தர்ப்பணம் செய்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவரை தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு, ரத்னாங்கி சேவை நடந்தது. இரவு யாளி வாகனத்தில், பூதேவி, ஸ்ரீதேவி சமேத உற்சவர் வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, தேரோட்டம், இன்று காலை 7:30 மணிக்கு நடக்கிறது.

