/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.100 கோடி மோசடி புகார் திருவள்ளூர் ஆடிட்டர் தற்கொலை
/
ரூ.100 கோடி மோசடி புகார் திருவள்ளூர் ஆடிட்டர் தற்கொலை
ரூ.100 கோடி மோசடி புகார் திருவள்ளூர் ஆடிட்டர் தற்கொலை
ரூ.100 கோடி மோசடி புகார் திருவள்ளூர் ஆடிட்டர் தற்கொலை
ADDED : அக் 26, 2024 03:36 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் குமரகுரு, 33; ஆடிட்டர். இவர், காக்களூரில் ஏ.கே.டெக்ஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தொழில் செய்து வந்தார்.
இவரிடம், கடம்பத்துாரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், தன் மனைவி சுலோச்சனா பெயரில் உள்ள நிறுவனத்திற்கு 2022ல் ஜி.எஸ்.டி., கட்ட அணுகியுள்ளார்.
அந்த நிறுவனத்திற்கு 27 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை கட்ட வேண்டும் என, 'நோட்டீஸ்' வந்துள்ளது. ஜி.எஸ்.டி., நிலுவைத்தொகை 27 லட்சம் ரூபாயை ஆடிட்டர் குமரகுரு சரிசெய்துள்ளார். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை, மேலும் 5 லட்சம் கட்ட வேண்டும் என, நோட்டீஸ் வந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட தகராறில், ஆடிட்டர் குமரகுரு மீது, பிரேம்குமார் 'தன்னையும் சேர்த்து 430 பேரிடம் 100 கோடி ரூபாய் குமரகுரு மோசடி செய்துள்ளார்' என, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி புகார் அளித்தார்.
இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க வழக்கறிஞருடன் வந்த ஆடிட்டர் குமரகுருவை, அங்கு வந்த பிரேம்குமார் 'என் மீதே புகார் கொடுக்க வந்திருக்கிறாயா' எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்து 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
இந்நிலையில், அன்றைய தினம் இரவு ஆடிட்டர் குமரகுரு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் தாலுகா போலீசார் குமரகுருவின் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரில் இருந்து 2.50 லட்சம் ரூபாய், லேப் - டாப், கடிதம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.