ADDED : மார் 06, 2026 05:44 AM
கும்மிடிப்பூண்டி: பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி, முனுசாமி நகரை சேர்ந்தவர் ராமு, 33. இவர், அதே பகுதியில், ஜி.என்.டி., சாலையோரம் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பெரியஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ், 25, என்பவர், தன் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப அங்கு சென்றுள்ளார். அப்போது, பெட்ரோல் நிரப்பிய வடமாநில ஊழியரான பீஹார் மாநிலத்தை சேர்ந்த தன்ஜெய்குமார், 23, என்பவர், கவனக்குறைவாக இருந்ததால், பெட்ரோல் கீழே சிந்தியது.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுபாஷ், வடமாநில ஊழியரை தாக்கியுள்ளார்.
பின், அங்கிருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமு மற்றும் ஊழியர்கள் இது தொடர்பாக தட்டி கேட்டனர். அப்போது, சுபாஷ் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பெரியஓபுளாபுரத்தைச் சிலரை பங்கிற்கு வரவழைத்தார்.
எட்டு பேர் கொண்ட கும்பல், தகராறில் ஈடுபட்டு பங்க் உரிமையாளர் ராமுவை சரமாரி தாக்கி தப்பி சென்றனர். கும்மிடிப்பூண்டி போலீசார், பங்க் உரிமையளரை தாக்கிய சுபாஷ், அவரது கூட்டாளிகளான அகத்தியன், 21, லட்சுமணன், 26 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
