ADDED : ஜன 01, 2025 12:23 AM
திருத்தணி,ஆந்திராவில் இருந்து, குட்கா பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வருவதாக, திருத்தணி டி.எஸ்.பி., கந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார், தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர்.
சந்தேகத்திற்கிடமாக இருந்த, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த விஜயகுமார், 46, ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்த மோகன், 45, ராமகிருஷ்ணன், 46 உள்ளிட்ட மூன்று பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட 13 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், குட்காவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

