/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடைகளை மறைக்கும் பேனர்களால் அவதி
/
கடைகளை மறைக்கும் பேனர்களால் அவதி
ADDED : ஜூலை 09, 2025 02:53 AM

மீஞ்சூர்:பல்வேறு அரசியல் கட்சியினர், கடைகளை மறைத்து விளம்பர பேனர்கள் வைப்பதால், வியாபாரிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
மீஞ்சூர் பஜார் பகுதியில் துணி, காய்கறி, மளிகை என, 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீஞ்சூரை சுற்றியுள்ள, 100க்கும் அதிகமான கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக உள்ளது.
பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் பிறந்தநாள் வாழ்த்து, பொதுக்கூட்டம் உள்ளிட்ட காரணங்களுக்காக, பஜார் பகுதியில் விளம்பர பேனர்களை வைக்கின்றனர்.
இந்த விளம்பர பேனர்கள், கடைகளை முழுமையாக மறைத்து வைக்கப்படுகின்றன. கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்ல முடியாத நிலையில், வியாபாரிகளுக்கு விற்பனை பாதிக்கிறது. இதற்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கத்தின் செயலர் டி.ஷேக் அகமது கூறியதாவது:
எந்தவித அனுமதியும் இன்றி வைக்கப்படும் விளம்பர பேனர்களால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இது அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சியினருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.