ADDED : ஆக 27, 2025 02:13 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடம்பத்துார் பகுதியில் ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக நேற்று முன்தினம் மாலை கடம்பத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடம்பத்துார் காவல் உதவி ஆய்வாளர் கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார் கடம்பத்துார், பிஞ்சிவாக்கம், அகரம், செஞ்சிபானம்பாக்கம், ராமன்கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது ராமன்கோவில் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் இருவர் சாக்கில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் இருந்து இரு மணல் மூட்டைகளையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சீனிவாசன், 40, ஸ்டீபன், 48 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.