UPDATED : ஜூலை 14, 2026 04:09 PM
ADDED : ஜூலை 14, 2026 04:00 PM

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து, அனுமதியின்றி எம் - சாண்ட் எனும் செயற்கை மணல் கடத்திச் சென்ற இரண்டு லாரிகளை, திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் பறிமுதல் செய்தார்.
ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து, திருத்தணி வழியாக சென்னை, திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களுக்கு, மணல், எம் - சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களை, அனுமதியின்றி டிப்பர் லாரிகள் மூலம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சாய்பிரனீத் உத்தரவின் பேரில், ஜூலை 13 இரவு 9:00 மணியில் இருந்து, ஜூலை 14 அதிகாலை 5:00 மணி வரை, திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழக - ஆந்திர மாநில எல்லையான, பொன்பாடி சோதனைச்சாவடி மற்றும் திருத்தணி காசிநாதபுரம் கூட்டுச் சாலை ஆகிய இடங்களில், டிப்பர் லாரிகளை நிறுத்திய போலீசார், பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
அப்போது, 'பில்' இருந்தால் மட்டுமே, டிப்பர் லாரிகள் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன. 'பில்' இல்லாத லாரிகளை பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது, 'பில்' இல்லாமல் நகரியில் இருந்து எம் - சாண்ட் எனும் செயற்கை மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை, திருத்தணி போலீசார் பறிமுதல் செய்தனர்.
