/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்...விரிவாக்கம்!:2050ம் ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு
/
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்...விரிவாக்கம்!:2050ம் ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்...விரிவாக்கம்!:2050ம் ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு
திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டம்...விரிவாக்கம்!:2050ம் ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு
ADDED : ஜூலை 24, 2024 01:50 AM

திருவள்ளூர்:'திருவள்ளூர் நகராட்சியில் 2050ம் ஆண்டு தேவைக்கு ஏற்ப பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்த பின் பணி துவங்கும்' என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், கடந்த, 2008ல், பாதாள சாக்கடைத் திட்டப்பணி, 55 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. அப்போது, நகரில், 11 ஆயிரத்து 907 கட்டடங்கள் இருந்தன. அதற்கேற்ற வகையில், நகரில், 86.97 கி.மீட்டருக்கு குழாய் பதிக்கும் பணி துவங்கியது.
பல்வேறு காலதாமதத்திற்கு பின், கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது பணிகள் நிறைவு பெற்று, இதுவரை, 7 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நகரின் மூன்று இடங்களில், கழிவு நீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவு நீர், புட்லுார் ஏரி அருகில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், வெளியேற்றப்படுகிறது.
நகர் விரிவாக்கம்
இந்த நிலையில், கடந்த, 14 ஆண்டுகளில் ஜெயா நகர், வி.எம்., நகர், பெரியகுப்பம், ஜவஹர் நகர், டோல்கேட் என பல்வேறு பகுதிகளில், புதிது, புதிதாக குடியிருப்புகள் உருவாகி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அதிகரித்து வரும் வீடுகளுக்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நகராட்சியில், வீடு, கடைகள், வணிக வளாகம், ஓட்டல் என, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.
மேலும், புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மக்கள் தொகையும், 65 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்த நிலையில், ஏற்கனவே உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவில்லை.
அவர்கள், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, நகராட்சி மழைநீர் கால்வாய் மற்றும் பொதுப்பணித் துறை கால்வாயில் வெளியேற்றுகின்றனர்.
இதனால், சாலைகளில் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் என, கடந்த இரண்டு ஆண்டுகளாக நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி பொறியில் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கூடுதல் இணைப்பு
திருவள்ளூர் நகரில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில், அதிகபட்சம், 8 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்க முடியும். தற்போது, 15 ஆயிரம் கட்டடங்கள் உருவாகி உள்ளன.
இதுவரை, 6 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் மேலும், 2 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு வழங்க முடியும்.
கூடுதலாக இணைப்பு வழங்க வேண்டுமென்றால், பாதாள சாக்கடை குழாய் அமைத்து, கூடுதலாக கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் மையம் அமைக்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்த பின், பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக அரசின் நிதி மேலாண்மை பிரிவு அலுவலர்களிடம், கோப்பு உள்ளது. அவர்கள், 2050ல் மக்கள் தொகை விரிவாக்கத்திற்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ஆலோசனை செய்து வருகின்றனர். ஆக., மாதம் அத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு, விரிவாக்க பகுதியை ஆய்வு செய்ய உள்ளனர். திட்ட ஆய்வறிக்கை மற்றும் தேவையான நிதி குறித்து அரசிடம் சமர்பிக்கப்பட்டதும், அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், நகர் முழுதும் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
- உதயமலர் பாண்டியன்,
நகராட்சி தலைவர், திருவள்ளூர்.