ADDED : அக் 04, 2025 08:00 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில், ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதில், பெரும்பாலான மாணவர்கள் அரசு பேருந்துகள் மூலமாக வந்து செல்கின்றனர். கும்மிடிப்பூண்டி பகுதியில், பள்ளி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லை.
இதனால், பள்ளி மாணவர்கள் பலர், நிரம்பி வழியும் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி சென்று வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாத மாணவர்கள், ஷேர் ஆட்டோ, சரக்கு ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஆபத்தாக பள்ளி சென்று வருகின்றனர்.
எனவே, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.