ADDED : ஜன 30, 2024 12:50 AM
திருவள்ளூர் : திருவள்ளுவர் அடுத்த தொழுவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் குபேரன், கூலித்தொழிலாளியான இவர், கடந்த 24ம் தேதி இரவு 9:40 மணியளவில் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பின்னால் வந்த ஆட்டோ குபேரன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து படுகாயமடைந்த குபேரனை, பகுதிவாசிகள் ஆட்டோவில் ஏற்றி திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்ததாக தெரிய வந்ததையடுத்து, ஆட்டோ ஓட்டுனர் சடலத்தை சாலையோரம் கிடைத்தி விட்டு சென்று விட்டார்.
இதுகுறித்து பகுதிவாசிகள் அளித்த தகவல்படி அங்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, குபேரனை ஆட்டோவில் ஏற்றி சென்றவர் வேப்பம்பட்டு அபிராமி கார்டன் பகுதியை சேர்ந்த முருகன், 56, என தெரியவந்தது.
அவர் மீது வழக்கு பதித்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.