/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தனியாக இருந்த தாய்,- மகள் கொலை
/
தனியாக இருந்த தாய்,- மகள் கொலை
ADDED : மார் 04, 2025 03:46 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்த பூவண் மனைவி சீதாலட்சுமி, 75. பூவண் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகள் ராமஜெயந்தி, 47, கணவரை பிரிந்து தாயுடன் வசித்தார்.
நேற்று மாலை வரை தாயும், மகளும் வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் எட்டையபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அங்கு சென்றபோது, சீதாலட்சுமியும், ராமஜெயந்தியும் சடலமாக கிடந்தனர். துாத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி., அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இருவரும் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அணிந்திருந்த, 10 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளது.
தாய், மகள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட நபர்கள், நள்ளிரவில் வீடு புகுந்து கொலை செய்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் உதவியோடு விசாரணை நடந்து வருகிறது. குடும்ப தகராறில் கொலை நடந்ததா, நகைக்காக நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.