/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஸ்ரீவை., தடுப்பணை ஷட்டரில் ஓட்டை: தண்ணீர் விரயம்
/
ஸ்ரீவை., தடுப்பணை ஷட்டரில் ஓட்டை: தண்ணீர் விரயம்
ADDED : ஆக 29, 2024 04:50 AM

துாத்துக்குடி : திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் 9 தடுப்பணைகள் உள்ளன. இதன் வாயிலாக 80,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக உள்ள இந்த அணைக்கட்டு வாயிலாக வடகால் மற்றும் தென்கால் விவசாயத்திற்கு பாசன வசதி வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஷட்டர்கள் அனைத்தும் பழுது நீக்கம் செய்யப்பட்டன. இருப்பினும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள ஒரு ஷட்டரில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளது. இரண்டு ஷட்டர்களில் 7 இடங்களில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வினாடிக்கு பல ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
'இந்த அணைக்கட்டை சீரமைக்க வேண்டும்' என பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

