/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பயன்பாட்டிற்கு வராத திருச்செந்துார் கோயில் தங்கும் விடுதி
/
பயன்பாட்டிற்கு வராத திருச்செந்துார் கோயில் தங்கும் விடுதி
பயன்பாட்டிற்கு வராத திருச்செந்துார் கோயில் தங்கும் விடுதி
பயன்பாட்டிற்கு வராத திருச்செந்துார் கோயில் தங்கும் விடுதி
ADDED : அக் 28, 2024 06:55 AM

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்கு, 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாக பணி நடக்கிறது.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில், 48.36 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி இரண்டு தளங்களுடன், 99,925 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதிகளுடன், 100 எண்ணிக்கையில் இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள் என, 28 கூடுதல் படுக்கை அறைகள் உள்ளன. ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், டிரைவர்கள் ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம், லிப்ட் வசதி என, அனைத்து வசதிகளுடன் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கும் விடுதியை அக்., 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சில் திறந்து வைத்தார். அன்றைய தினமே பக்தர்கள் பயன்பாட்டிற்காக முன்பதிவு துவங்கும் என, அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை பக்தர்கள் தங்கும் விடுதி பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பெயரளவுக்கு, 20 குடில்கள் மட்டும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கட்டணம் நிர்ணயம் செய்வதிலும், யார் நிர்வாகம் செய்வது என்பதிலும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. சுற்றுலாத்துறை, அறநிலையத் துறை அல்லது கோயில் நிர்வாகம் என, மூன்று துறைகளில் யார் நிர்வாகம் செய்வது என, இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
கோயில் அருகிலேயே சுற்றுலாத்துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல் இருப்பதால், அவர்களே பக்தர்கள் தங்கும் விடுதியை நிர்வாகம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் கட்டுபாட்டில் இருந்தால், பக்தர்களுக்கு குறைவான கட்டத்தில் அறைகள் கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் நிர்வாகம் தங்கும் விடுதியை நிர்வாகம் செய்தால் மட்டுமே பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கந்தசஷ்டி விழா நவ., 2ம் தேதி துவங்க உள்ள நிலையில், ஏராளமானோர் தனியார் லாட்ஜ்களில் அறை முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைந்து நல்ல முடிவை எடுக்குமா என, முருக பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகளோ மவுனம் காத்து வருகின்றனர்.