ADDED : டிச 13, 2024 02:42 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுகம் பகுதியில் சிலர் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வேட்டை தடுப்பு பணியில் இருந்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த சுதாகர், 28, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 23, உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.
சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று வாலிபர்களிடம் அவர்கள் சோதனையிட்டபோது, மூவரும், மணிகண்டனையும், சுதாகரையும் கத்தியால் குத்தி தப்பினர். அங்கிருந்த 20 கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, தென்பாகம் போலீசார் பாத்திமா நகரைச் சேர்ந்த பிராட்லி, 22, என்பவரை நேற்று கைது செய்தனர்.
மேலும், கணேசபுரத்தைச் சேர்ந்த திலக் உள்ளிட்ட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
