ADDED : ஜூன் 25, 2025 03:23 AM

துாத்துக்குடி:'ஸ்டெர்லைட் ஆலையை திறக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக, 2018ல் நடந்த போராட்டம் கலவரமானது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.
ஆலையை மீண்டும் திறக்க ஒரு தரப்பினும், ஆலையை அங்கிருந்து அகற்ற ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டாக நேற்று கூறியதாவது:
வதந்திகள் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். ஆலை மூடப்பட்ட பின், மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.
கார் கம்பெனி, ஐ.டி., நிறுவனங்கள் வந்துள்ளதாக கூறினாலும், இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்கின்றனர்.
ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு அரசோ, வேறு நிறுவனமோ வேலை வழங்கவில்லை. ஸ்டெர்லைட் இயங்கியபோது, பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 1,500 பேர் அங்கு பணியாற்றினர். அவர்களில் பலர் தற்போது மூட்டை துாக்கும் தொழிலுக்கும், கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கினால், வேலை கிடைக்கும். போதிய வேலை இல்லாததால், இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் வாயிலாக, எங்கள் கருத்துக்களை எடுத்து கூறுவோம். அரசு உடனடியாக, ஸ்டெர்லைட் ஆலையையும், அனல் மின் நிலையத்தையும் திறக்க வேண்டும். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.