/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்தூரில் அபாய நிலையில்
/
திருச்செந்தூரில் அபாய நிலையில்
ADDED : செப் 10, 2011 03:45 AM
அரசு பள்ளி கட்டடம்: சீரமைக்க கோரிக்கை
திருச்செந்தூர் : செந்திலாண்டவர் அரசு மேல்நிலைப்பள்ளி அபாயகரமாக இடிந்து
விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை பராமரிக்க கோரி காங்., சார்பில்
மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் டவுன் மனுவில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில்
வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக திருச்செந்தூர் திகழ்ந்து வருவது தாங்கள்
அறிந்த ஒன்று. இங்கு உள்ள அரசு பள்ளியில் இந்த பகுதியை சுற்றி உள்ள ஏழை
எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் சுமார் 1000த்துக்கும்
மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு உள்ள அரசு பள்ளி
கட்டடம் பல ஆண்டுகளாக சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் இங்கு உள்ள
அனைத்து கட்டடங்களும் அபாயகரமாக சூழ்நிலையில் இடிந்து விழும் சூழ்நிலையில்
உள்ளதால் இங்கு முதல் தளத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் எந்த நேரத்தில்
கட்டடம் இடிந்து விழும் என அஞ்சி தரைத்தளத்தில் மட்டும் படிக்க
அனுமதிக்கப்படுகின்றனர். தரைத்தளத்திலும் கட்டடம் மோசமாக உள்ளதால் இங்கு
படிப்பதற்கு அஞ்சி இங்கு படிக்க கூடிய மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள்
வெகுவாக குறைந்து வருகிறது. இங்கு படிக்கக்கூடிய மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் கவனம் கட்டடத்தின் மீதே எப்போதும் உள்ளது. இதனால் கவனச்சிதறல்
ஏற்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி
எண்ணுவதை விட நிகழ்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என அஞ்சுகிறார்கள். கல்வி
கற்பதிலும் கற்ப்பிப்பதிலும் கவனச்சிதறல் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம்
முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில
அரசுகள் இன்றைய கால கட்டத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற
எண்ணத்தோடு கட்டாய கல்வியை உருவாக்கி வருகின்றது.
கல்விக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வரும் சூழ்நிலையில்
திருச்செந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் அபாயகரமாகவும்,
அவலநிலையிலும் உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. எனவே தாங்கள் உடனடியாக
பள்ளியை பார்வையிட்டு போர்கால அடிப்படையில் பள்ளியின் அடிப்படை தேவையான
கட்டடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செந்தூர் நகர
காங்.,கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்டவாறு திருச்செந்தூர்
நகர காங்.,தலைவர் குறிஞ்சி சுரேஷ் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

