இரு கிராமத்தினர் மோதலில் 42 பேர் சிறையில் அடைப்பு
இரு கிராமத்தினர் மோதலில் 42 பேர் சிறையில் அடைப்பு
ADDED : செப் 16, 2026 05:59 AM
துாத்துக்குடி: விளாத்திகுளம் அருகே இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம் மற்றும் இலக்கம்பட்டி கிராமங்களுக்கு இடையே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், இரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், கபடி விளையாடி வந்தனர்.
அந்த இடத்தை சொந்தம் கொண்டாடுவதில், இரு கிராமத்தினருக்கும், சில மாதமாக தகராறு ஏற்பட்டு வந்தது. செப்., 13 இரவு மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி, தாக்கிக் கொண்டனர். தடுக்க சென்ற ஐந்து போலீசார் உட்பட கிராம மக்கள், 20 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிந்து, கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இலந்தைகுளத்தைச் சேர்ந்த, 20 பேரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையிலும், இலக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 22 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
தொடர்ந்து பிரச்னை ஏற்படாமல் இருக்க, இரு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
