/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மலைப்பாதைகளில் 'டிரக்கிங்' செல்ல வனத்துறை தடை
/
மலைப்பாதைகளில் 'டிரக்கிங்' செல்ல வனத்துறை தடை
ADDED : பிப் 22, 2024 02:25 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி, வேலுார் மாவட்டம் அமிர்தி உள்ளிட்ட, ஆறு மலைப்பாதைகளில் 'டிரக்கிங்' செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுதும், 30க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மலைப்பாதைகளில், வனத்துறை அனுமதி பெற்று, 'டிரக்கிங்' செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதில், 2018ல் தேனி மாவட்டம் குரங்கினிமலையில், மலையேற்ற பயிற்சி பெற்ற, 20 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியாகினர். இதையடுத்து, கோடைக்காலங்களில், மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து வருகிறது.
தற்போது கோடைக்காலம் துவங்கி விட்டதால், மலையேற்ற பயிற்சிக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
இதனால், திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி, வேலுார் மாவட்டம் அமர்தி, ஒடுகத்துார், மேல் அரசம்பட்டு மற்றும் தீர்த்தகிரி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மூர் உட்பட, ஆறு மலைப்பாதைகளில், 'டிரக்கிங்' செல்ல, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், விறகு எடுக்கவும், ஆடு, மாடு மேய்ச்சலுக்கு கூட வனப்பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என, பொதுமக்களை வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.