ADDED : ஆக 18, 2026 02:37 AM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, 17 வயது கல்லுாரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மூவரை தேடுகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த, 17 வயது மாணவி, பாரா மெடிக்கல் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர், கடந்த வாரம், மூன்று நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில், பெற்றோர், ஆம்பூர் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், 16 மற்றும் 17 வயதுடைய, அதே பகுதியைச் சேர்ந்த ஆண் நண்பர்களுடன் சென்றது தெரியவந்தது.
போலீசார் அவரை மீட்ட நிலையில், மாணவிக்கு உடல்நிலை பாதித்திருந்தது.
பெற்றோர் அவரை, வேலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மருத்துவமனை நிர்வாகம், ஆம்பூர் மகளிர் போலீசில் புகார் செய்தது.
போலீசார், மாணவியிடம் விசாரணை நடத்தியதில், 16 மற்றும் 17 வயதுடைய, ஐந்து வாலிபர்கள், மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு, இருவரை போலீசார் கைது செய்து, தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.
மாணவியும், பலாத்காரம் செய்த வாலிபர்களும், ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போலீசாருக்கு தெரியாமல் மறைக்க, இரு தரப்பினரும் கிராம மக்கள் முன்னிலையில், கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
