ADDED : மார் 04, 2024 10:54 AM
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளில், கடந்த பிப்ரவரி மாதத்தில், 7.70 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது.
தெற்கு உழவர் சந்தையில், ஐந்து கோடியே, 18 லட்சத்து, 57 ஆயிரத்து, 395 ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. 1,932 டன் காய்கறி வரத்து மூலம், இது சாத்தியமாகியுள்ளது.
வடக்கு உழவர் சந்தையில், இரண்டு கோடியே, 52 லட்சத்து, 40 ஆயிரத்து, 405 ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. இச்சந்தைக்கு, கடந்த மாதத்தில், 731 டன் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தை விட, இரண்டு சந்தைகளின் வரத்து, பத்து முதல் 30 டன் வரை குறைந்துள்ளது.
முந்தைய மாதம் தக்காளி வரத்து அதிகமாகியது; பொங்கல் தொடர் விடுமுறை, தைமுகூர்த்தம் காரணமாக, வரத்தும், விற்பனையும் அதிகரித்தது.ஆனால், பிப்., மாதம், பெரும்பாலான காய்கறிகளின் விலை நிலைத்தன்மை இல்லாமல், விலை உயர்விலேயே தொடர்ந்தது.''தக்காளி விலை குறைவாக இருந்த போதும், கத்தரி, கேரட், பீன்ஸ் விலை தொடர்ந்து, கிலோ, 60 முதல், 80 என்ற நிலையில் இருந்ததால், பிப்., மாதத்தில் காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை'' என்கின்றனர், சந்தை அலுவலர்கள்.
