/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் வரும் 22ல் மனித சங்கிலி
/
திருப்பூரில் வரும் 22ல் மனித சங்கிலி
ADDED : ஜூலை 17, 2011 01:16 AM
திருப்பூர் : சாயத் தொழில் பிரச்னையில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, வரும் 22ம் தேதி, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் சாய தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், மா.கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. சாய கழிவுநீர் பிரச்னையில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, சமுதாய பொருளாதார பாதிப்புகளில் இருந்து திருப்பூரை மீட்க முடியும்; சாய ஆலைகளை திறந்து இயக்க, தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது; வரும் 22ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு, திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மனித சங்கிலி போராட்டத்தை துவக்கி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தொழில்துறையினரும், தொழிலாளர்களும், வர்த்தகர்களும், போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடப்பட்டது. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழிற்நுட்பத்தை நடத்த முன்வரும் சாய ஆலைகள், விரைவில் இயங்க அனுமதிக்க வேண்டும்; விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும்; கண்காணிப்பு குழுவை விரிவாக்கம் செய்ய வேண்டும்; ஏற்கனவே அறிவித்தபடி, 320 கோடி ரூபாய் மானிய உதவியை வழங்கி, தொழிலை நவீனப்படுத்த உதவ வேண்டும்; சாய ஆலைகளுடன் சலவை ஆலைகளை சேர்க்காமல், சலவை ஆலைகளை உடனடியாக இயங்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., தங்கவேல், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் ரவி, தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவர் மணி, ம.தி.மு.க., நகர செயலாளர் சிவபாலன் உட்பட, மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.