ADDED : மே 30, 2024 12:34 AM
பல்லடம் : ல்லடம் ஒன்றியம், அருள்புரம் பாச்சாங்காட்டுபாளையம் கிராமத்தில், கற்பக விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கடந்த, 45 ஆண்டுகளாக திருப்பணி நடைபெறவில்லை. தற்போது, கிராம மக்களின் தீவிர முயற்சி காரணமாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, பாலாலய கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, திருமஞ்சன வழிபாடும், விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மனை தீர்த்த கலசங்களில் எழுந்தருளச் செய்தல், சிறப்பு வேள்வி வழிபாடுகளும் நடந்தன. நேற்று காலை, பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டு, பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மாரியம்மன் மாகாளியம்மன் கண்ணாடியிலும், வழிபாட்டுக்காக கற்பக விநாயகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.