/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்., நிர்வாகிகளிடம் கேட்கப்படும் 10 கேள்விகள்
/
காங்., நிர்வாகிகளிடம் கேட்கப்படும் 10 கேள்விகள்
ADDED : மே 19, 2024 01:25 AM

திருப்பூர்;மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தும், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நிர்வாகிகள் கூட்டத்தின் போது வினாத்தாள் வழங்கி பதில் பெற்று வருகிறார்.
அதில் சொல்லப்படும் விபரங்களை வைத்து, கட்சி நிர்வாக கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்திருக்கிறார்.
அந்த வகையில் திருப்பூரில் மாவட்ட காங்., கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பங்கேற்க வந்த நிர்வாகிகளின் தனி விபரங்கள் மற்றும் மேலான கருத்துக்கள் என்று குறிப்பிட்டு, ஒரு வினாத்தாள் வழங்கப்பட்டது.
அதில், பெயர், வயது, சமூக விபரம், தற்போது வகிக்கும் கட்சி பதவி, தங்கள் சார்ந்த கட்சி மாவட்டத்தின் பெயர், தற்போது மாவட்ட காங்., கமிட்டியின் செயல்பாடு எப்படி உள்ளது, தங்கள் பகுதியில் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும், கட்சியின் மாநில நிர்வாக செயல்பாடு உட்பட, 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
கேள்விகளுக்கு அனைவரும் விடையளித்து, படிவத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று மேடையில் இருந்த மாநில நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். பின், ஒவ்வொருவரிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட தகவல் பெறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் இதுபற்றி கூறியதாவது:
மாவட்டம், தாலுகா, வட்டார வாரியாக கட்சியினரின் மனநிலையை அறிந்து கொள்ள, அதற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த, இத்தகைய விவரங்கள் மாநில தலைவர் பங்கேற்கும் கூட்டங்களில் கேட்கப்படுகிறது.
குறிப்பாக, காங்., கட்சியின் தற்போதைய நிலை மற்றும் செயல்பாடு, கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு, காங்., நிர்வாகிகள் அளிக்கும் பதில்களை தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பார்வைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒவ்வொரு நிர்வாகியும் அளிக்கும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்களை வைத்து, கட்சி நிர்வாக கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த செல்வப்பெருந்தகை முடிவெடுத்துள்ளார்.
அதற்காகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் நிர்வாகிகள் கூட்டம் வாயிலாக, அவர்கள் எண்ணங்கள் கேட்டுப் பெறப்படுகின்றன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் போய் வந்த பின், கட்சியில் பெரிய மாற்றம் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

