/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாட்டு சாணத்தை கஞ்சா என விற்ற 4 பேர் கைது
/
மாட்டு சாணத்தை கஞ்சா என விற்ற 4 பேர் கைது
ADDED : மே 03, 2024 02:44 AM

திருப்பூர்:திருப்பூரில், மாட்டு சாணத்தை கஞ்சா எனக்கூறி விற்பனை செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், மங்கலம் ரோடு, பழக்குடோன் அருகே நேற்று முன்தினம் டூவீலரில் வந்த வாலிபர், இருவர் சந்தேகப்படும் வகையில் போனில் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சென்ட்ரல் போலீசாரை கண்டதும், இருவரும் தப்ப முற்பட்டனர்.
உடனே, இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், கோவை, சிறுமுகையை சேர்ந்த லோகநாதன், 22, உமா மகேஸ்வரன், 21 என்பது தெரிந்தது. டூவீலரை சோதனை செய்த போது, உள்ளே கஞ்சா போன்ற பொட்டலம் ஒன்று இருந்தது. இதுகுறித்து போலீசார் கேட்டதற்கு, 'கஞ்சா வாங்க, திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்த ராகுல் என்பவரை தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு, கே.வி.ஆர்., நகரில், இருவரை சென்று பார்க்க கூறினார். அவர்கள் கஞ்சா தருவார்கள்,' என்று கூறினார்.
'இதனை நம்பி, மங்கலம் நால் ரோட்டில் வைத்து, இருவரை சந்தித்தோம். ஒரு கிலோ கஞ்சாவிற்கு, 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி சென்றோம். பொட்டலத்தின் எடை அதிகமாக இருந்த காரணத்தால், சந்தேகமடைந்து, திறந்து பார்த்த போது, மாட்டு சாணம், வைக்கோல் கலந்து கொடுத்து, கஞ்சா என விற்று மோசடி செய்தது தெரிந்தது,' என்றனர்.
இருவர் கொடுத்த தகவலின் படி, கே.வி.ஆர்., நகரை சேர்ந்த சாரதி, 21, கவின், 22 என, இருவரை பிடித்தனர். மாட்டு சாணத்தை, கஞ்சா பொட்டலம் என விற்று ஏமாற்றியது தெரிந்தது. இருவரும் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில், லோகநாதன், உமாமகேஸ்வரன், சாரதி மற்றும் கவினை சென்ட்ரல் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.