/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லட்சத்தை நெருங்குகிறது லட்சிய பயணம்
/
லட்சத்தை நெருங்குகிறது லட்சிய பயணம்
ADDED : ஆக 03, 2024 06:14 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தில், இதுவரை, 94,835 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. லட்சியப்பயணம் லட்சத்தை நெருங்கியுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில், 18 லட்சம் மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; பத்தாவது திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்று நடும் இலக்குடன், பசுமைப்பயணம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த, மார்ச் 12ல் துவங்கிய பசுமை பயணம், 33 சதவீதத்தை எட்டியுள்ளது; நேற்றைய நிலவரப்படி, 94 ஆயிரத்து, 835 மரக்கன்றுகள் நடப்பட்டு, லட்சியப்பயணம் லட்சத்தை நெருங்கியுள்ளது.
பத்தாவது திட்டத்தில், சவுக்கு, மலைவேம்பு, நாட்டு வேம்பு, புங்கன், செம்மரம், புளி, பாதாம், சந்தனம், நீர்மருது, குமிழ், துாங்குவாகை, நாட்டு அத்தி, சரங்கொன்றை, காயா, புன்னை, ஈட்டி, கருமருது, வேங்கை, பலா, என, 98 வகை மரக்கன்றுகள், 94 ஆயிரத்து, 835 எண்ணிக்கை நடப்பட்டுள்ளன.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் நேற்று, விஜயாபுரம் அடுத்துள்ள வஞ்சிவரம்புதுார், ஊஞ்சக்காடு தோட்டத்தில், மரக்கன்று நடும் விழா நடந்தது. அப்பகுதியில், 1,200 சவுக்கு மரக்கன்றுகள் நடும் பணியை, நில உரிமையாளர் குடும்பத்தினர் துவக்கி வைத்தனர்.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.