/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேட்பாளர் தேர்தல் செலவு தணிக்கை துவங்கியது
/
வேட்பாளர் தேர்தல் செலவு தணிக்கை துவங்கியது
ADDED : ஜூன் 30, 2024 11:09 PM
திருப்பூர்;லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர், சுயேச்சைகள் உள்பட 13 வேட்பாளர்கள் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. பிரசாரங்கள், பொதுமக்கூட்டம், தலைவர்கள் வருகையின்போது வேட்பாளர்களின் செலவினங்கள், மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும்படையினரால், வீடியோ பதிவு செய்து, கணக்கிடப்பட்டது.
கடந்த ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து, 6ம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டன.
தேர்தல் முடிந்தபோதும்கூட, மாவட்ட தேர்தல் பிரிவினர், பல்வேறு வகை பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்தவகையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து தேர்தல் செலவின கணக்குகள் பெறப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டுவருகிறது.
தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார், திருப்பூர் வந்துள்ளார். 13 வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட தேர்தல் செலவு கணக்குகள், கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, தணிக்கை செய்யப்பட்டுவருகிறது. இப்பணிகளில், அதிகாரிகள் 18 பேர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர் சமர்ப்பித்த செலவின கணக்குகள், தேர்தல் காலத்தில் கண்காணிப்பு பிரிவினரால் கணக்கிடப்பட்ட செலவினங்களுடன் ஒப்பிடப்பட்டு, சரிபார்க்கப்படுகிறது. ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் விளக்கம் பெறப்படும். பரிசீலனை முடிந்து, செலவின பார்வையாளரால், வேட்பாளரின் செலவின கணக்கு அங்கீகரிக்கப்படும். அதோடு, தேர்தல் சார்ந்த அனைத்து அலுவல் பணிகளும் முடிவடையும்.
----
மூவர்ணக் கொடியேந்தி, மகிழ்ச்சி ததும்ப கோலி, ரோகித்