/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முழுமையாக தயாராகுங்கள் தொழிலை எளிதாக்குங்கள்
/
முழுமையாக தயாராகுங்கள் தொழிலை எளிதாக்குங்கள்
ADDED : செப் 01, 2024 11:23 PM

ஸ்ருத்திகா சேதுமாதவன், பின்னலாடை ஏற்றுமதியாளர், திருப்பூர்.
என் தந்தை கேரளாவை பூர்வீமாக கொண்டவர்; சென்னையில் படிப்பை முடித்து, திருப்பூரில் செட்டிலாகிவிட்டார். கடுமையாக உழைத்து, அவர் உருவாக்கிய ஏற்றுமதி நிறுவனத்தை, தற்போது நானும் நிர்வகித்து வருகிறேன்.
அமெரிக்காவில், எம்.பி.ஏ., படித்து முடித்து திரும்பியதும், 2017 முதல் தந்தைக்கு உதவியாக களமிறங்கிவிட்டேன். அப்போது, தொழில் நன்றாக இருந்தது; கொரோனா பாதிப்பு, நுால் விலை உயர்வு, உக்ரைன் போர் சூழல் என, பல்வேறு பாதிப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
சுருக்கமாக கூற வேண்டுமெனில், தொழிலில் முன்னேற்றம் இல்லை; சிரமம் அதிகம் இருக்கிறது. கொரானாவுக்கு முன்புவரை, வர்த்தகர்கள் நேரடியாக, நம்முடன் பேசி வர்த்தகம் செய்வார்கள். தற்போது, பல ஏற்றுமதியாளர்களை சந்திக்கின்றனர்; உற்பத்தி மற்றும் விலை விவரங்களை கேட்டு, ஒப்பிட்டு பார்த்து வர்த்தகம் செய்ய துவங்கிவிட்டனர்.
சில வர்த்தகர்கள், 25 ஆண்டுகளாக எங்களுடன் தொடர்கின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். சில நேரங்களில், சொற்ப விலை வித்தியாசத்தில் ஆர்டர்களை இழக்க நேரிடுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஏற்றுமதி வர்த்தகம் கடந்த மூன்று மாதங்களாக முன்னேறியுள்ளது.
இருப்பினும், கடந்தகால அனுபவங்களை கொண்டு, இனிவரும் காலங்களில் வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும், நமது தொழிலில் உடனுக்குடன் இணைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில், தொழில் நடத்துவது எளிதில்லை; மிகுந்த கவனத்துடன் வழிநடத்தி செல்ல வேண்டும். அதற்காக, நம்மை முழுமையாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.