/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருதரப்பு மோதல்; அச்சத்தில் கிராம மக்கள்
/
இருதரப்பு மோதல்; அச்சத்தில் கிராம மக்கள்
ADDED : ஜூலை 21, 2024 12:25 AM
பல்லடம்:இருதரப்பு மோதல் சம்பவத்தை தொடர்ந்து, பல்லடம் அருகே அய்யம்பாளையம் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் இப்பகுதியில் பிரதானமாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்கள் முன், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதன் காரணமாக, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியாக மாறியது. இதில் காயமடைந்த ஒரு தரப்பினர், ஆட்களை திரட்டி வந்து எதிர் தரப்பினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட, மற்றொரு தரப்பினர் அரிவாள் மற்றும் உருட்டு கட்டைகளுடன் தாக்க முயன்றனர்.
திருப்பூரில் இருந்து அதிவிரைவு படை வரவழைக்கப்பட்டு, பிரச்னை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவம் அய்யம்பாளையம் பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'பல்லடம் வட்டாரத்தில் ஏற்கனவே அரிவாள் கலாச்சாரம், கூலிப்படை தாக்குதல் ஆகியவை அதிகரித்து வருகிறது. கள்ளக்கிணறு பகுதியில், 4 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமும் இதற்கு உதாரணம்.
இவ்வாறு, அய்யம்பாளையம் கிராமத்தில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் உரசியதால் ஏற்பட்ட சாதாரண பிரச்னைக்கு, அரிவாள், உருட்டு கட்டைகளுடன் மோதலில் ஈடுபட்டதால், இப்பகுதியின் அமைதியை சீர்குலைப்பதாக உள்ளது.
இது போன்று அச்சுறுத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்' என்றனர்.