ADDED : ஜூலை 05, 2024 12:31 AM
திருப்பூர்:மாநில பாடத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று, தற்போது பிளஸ் 1 செல்லும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, முதல்வர் திறனாய்வுத்தேர்வு ஜூலை, 21ல் நடக்க இருந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன், 26 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
விண்ணப்பிக்கும் மாணவர் வசதிக்காக, ஜூலை, 3ம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் அவகாசம் முடிந்த நிலையில், தேர்வு நடக்கும் தேதியை மாற்றி தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும், 21க்கு பதிலாக ஆக., 4ம் தேதி முதல்வர் திறனாய்வு தேர்வு நடக்கவுள்ளது.
தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதால், விண்ணப்பிக்க காலஅவகாசம் ஜூலை, 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, மாணவ, மாணவியர் தேர்வுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.