/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடவிளாகத்தில் தேரோட்டம் கோலாகலம்
/
மடவிளாகத்தில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : மார் 25, 2024 12:58 AM

திருப்பூர்:காங்கயம், மடவிளாகத்தில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான ஆருத்ர கபாலீஸ்வரர், ரகுபதி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாதத்தில் திருத்தேர் திருவீதி உலா வரும்.
இந்தாண்டு தேரோட்ட நிகழ்ச்சிகள் கடந்த, 18 ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் யாக பூஜையும், கருடவாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீதேவி சமேத ஸ்ரீரகுபதி நாராயணப் பெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நேற்று காலை பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, 4:10 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீகல்யாணசுப்பிரமணியர் தேர், ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீரகுபதி நாராயணப்பெருமாள் தேர், ஸ்ரீ கணபதி தேர், ஸ்ரீ பிரகல நாயகி அம்மன் தேர் என, நான்கு தேர்கள் முன்னால் செல்ல, பெரிய தேரில் ஸ்ரீ சோமாஸ்கந்தர் வலம் வந்தார்.
இரண்டு கிலோ மீட்டர் வலம் வந்த தேர் மாலை 6:10 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இன்று பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவ விழா நடைபெற உள்ளது.

