/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய் முற்றும் முன்பே தோப்பில் அறுவடை! பற்றாக்குறையால் வியாபாரிகள் உஷார்
/
தேங்காய் முற்றும் முன்பே தோப்பில் அறுவடை! பற்றாக்குறையால் வியாபாரிகள் உஷார்
தேங்காய் முற்றும் முன்பே தோப்பில் அறுவடை! பற்றாக்குறையால் வியாபாரிகள் உஷார்
தேங்காய் முற்றும் முன்பே தோப்பில் அறுவடை! பற்றாக்குறையால் வியாபாரிகள் உஷார்
ADDED : மார் 09, 2025 11:14 PM
உடுமலை; நடப்பு சீசனில், தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட தென்னந்தோப்புகளில், 30 நாட்களிலேயே தேங்காயை அறுவடை செய்து கேரளா வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர்.
தமிழகத்தில், மொத்தமாக, 4.42 லட்சம் ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது; சராசரி உற்பத்தி திறன் ஒரு ெஹக்டேருக்கு 12,882 காய்களாக இருந்தது.
ஓராண்டுக்கும் மேலாக, தென்னை மரங்களில் கேரளா வாடல், வெள்ளை ஈ தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், சராசரியை விட உற்பத்தி குறைவாகி விட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், 60 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், கொப்பரை வர்த்தகம் அடிப்படையில், தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
எனவே, தென்னை மரங்களில் இருந்து, 45 - 55 நாட்கள் இடைவெளியில், தேங்காய் பறிப்பது வழக்கம். கடந்த ஓராண்டாக, நோய்த்தாக்குதலால் தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது.
இந்நிலையில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், முகாமிட்டுள்ள கேரளா வியாபாரிகள், 30 நாட்களிலேயே தேங்காயை அறுவடை செய்து, தேங்காய் ஒன்றுக்கு, 22-25 ரூபாய் வரை, விலை கொடுத்து கொள்முதல் செய்து கொள்கின்றனர்.
முன்னதாகவே அறுவடை செய்யப்படும் தேங்காய், சட்னி மற்றும் இதர உணவு தயாரிப்பு தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய்களின் தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், திருப்பூர் மாவட்டத்தில், இவ்வகை கொள்முதலில், கேரளா வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிமங்கலம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'கேரளா வியாபாரிகள், இளநீர் காய்கள் காய்ந்த தேங்காயாக முற்றும் முன்பே, 30 நாட்களில், அறுவடை செய்து கொள்கின்றனர். கொப்பரை விலை நிலவரத்துக்கேற்ப தேங்காய்க்கு விலை கிடைப்பதில்லை. எனவே, கேரளா வியாபாரிகளின் இவ்வகை கொள்முதலை பெரும்பாலான விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இனி வரும் மாதங்களில், கொப்பரை உற்பத்திக்கான தேங்காய்க்கும் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது,' என்றனர்.