/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கன்டெய்னர் தட்டுப்பாடு; கலங்கும் ஏற்றுமதியாளர்கள்
/
கன்டெய்னர் தட்டுப்பாடு; கலங்கும் ஏற்றுமதியாளர்கள்
ADDED : ஜூலை 07, 2024 11:15 PM
திருப்பூர்:திருப்பூரில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம், ஏற்றுமதிக்கான பின்னலாடைகள், அனுப்பி வைக்கப்படுகிறது. சுங்கவரித்துறை மேலாய்வு முடிந்து, அதே கன்டெய்னரில் வைத்து சீலிடப்படுகிறது.
சென்னை, கொச்சி, துாத்துக்குடி துறைமுகங்களில், பெரிய சரக்கு கப்பல் வந்து செல்ல வசதி உண்டு. இருப்பினும், சீனாவில் இருந்து புறப்படும் கப்பல், கொழும்பு வந்து, அங்கிருந்து துாத்துக்குடி வந்துசெல்ல, கூடுதலாக, இரண்டு நாட்களாகிறது. துாத்துக்குடி செல்லும் ஏற்றுமதி கன்டெய்னர்கள், அங்கிருந்து சிறிய கப்பல்களில், கொழும்பு துறைமுகம் கொண்டு சென்று, அங்கு பெரிய கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது.
நிரந்தரத் தீர்வு தேவை
திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ரத்தினசாமி:
கடந்த ஒரு மாதமாக, சரக்கு அனுப்ப, கன்டெய்னர் கிடைப்பதே இல்லை; கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. துாத்துக்குடியில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, வாடகை கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி சரக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், ஏற்றுமதிக்கான கன்டெய்னர் கிடைப்பதில்லை. செங்கடல் பாதிப்பு காரணமாக, கப்பல் சுற்றிச்செல்வதால், தட்டுப்பாடு என்கின்றனர்.
சீனா உள்ளிட்ட சில நாடுகளை மட்டுமே, கன்டெய்னருக்காக சார்ந்திருக்கிறோம். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை.
கட்டண உயர்வு
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம்:
கன்டெய்னர் தட்டுப்பாடு காரணமாக, கடந்த மூன்று மாதங்களில், வாடகை கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. சிறிய கன்டெய்னர் வாடகை, மே மாதம், 2.72 லட்சம் ரூபாயாக இருந்தது; கடந்த வாரம் 5.59 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரிய கன்டெய்னர் வாடகை, 3.53 லட்சம் ரூபாயாக இருந்தது; 7.26 லட்சமாக உயர்ந்துள்ளது. விமான சரக்கு போக்குவரத்து கட்டணமும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து அமெரிக்கா அனுப்ப, கிலோவுக்கு, 561 ரூபாய்; பிரிட்டனுக்கு அனுப்ப, 332 ரூபாய் செலவாகிறது. விமானத்தில் சரக்கு அனுப்ப, 20 முதல், 25 சதவீதம் அளவுக்கு செலவு அதிகரிக்கும். ஒவ்வொரு ஆர்டர்களையும் கண்ணும், கருத்துமாக தயாரித்தாலும் ஏற்றுமதியாளருக்கு நஷ்டமே மிஞ்சும் நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது. நஷ்டத்தை தவிர்க்க, ஆர்டர் கொடுத்த வர்த்தகர்களிடம், மீண்டும் பேசி, விலையை உயர்த்தி கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறோம். புதிய ஆர்டர் ஒப்பந்தம் செய்யும் போது, ஆடை உற்பத்தி செலவும் அதிகரிக்கும்.
பஞ்சு, நுால் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி, வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட பண வீக்கம் என, பல்வேறு நெருக்கடியை கடந்து வந்து, எதிர்நீச்சல் போட்ட ஏற்றுமதியாளர்களுக்கு தற்போது புதிய சவால் எழுந்துள்ளது.
***