/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடல் முழுவதும் கட்டுகளுடன் பங்கேற்ற கவுன்சிலர்; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
/
உடல் முழுவதும் கட்டுகளுடன் பங்கேற்ற கவுன்சிலர்; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
உடல் முழுவதும் கட்டுகளுடன் பங்கேற்ற கவுன்சிலர்; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
உடல் முழுவதும் கட்டுகளுடன் பங்கேற்ற கவுன்சிலர்; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
ADDED : மார் 04, 2025 06:42 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்துக்கு உடல் முழுவதும் காயங்களுக்கான கட்டு போட்டவாறு, அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று காலை மேயர் தலைமையில் நடந்தது.
அப்போது, 30வது வார்டு கவுன்சிலர்புஷ்பலதாவை (அ.தி.மு.க.,) அவரது உதவியாளர்கள் தலை, கை, கால், முகம் என உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் மாவுக்கட்டு போட்ட நிலையில் அழைத்து வந்தனர். மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் அதிர்ச்சி யடைந்தனர்.
'தனது வார்டில் ரோடுகள் நிலை கடந்த, 2 ஆண்டுக்கும் மேலாக மிகவும் மோசமாக உள்ளது. தினமும் வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். இதை சுட்டிக்காட்டவே இந்த நிலையில் தான் வந்துள்ளதாக,' அவர் கூறினார்.
இதனைக்கேட்டு ஆவேசமடைந்த மேயர், 'உங்கள் நாடகத்தை கலைத்து விட்டு வந்து பேசுங்கள். மக்கள் சபையின் மாண்பைக் குறைக்க வேண்டாம். உங்கள் வார்டில் என்ன பணி நடக்கிறது. ஏன் பிரச்னை எனத் தெரிந்தும் இப்படி நடப்பது சரியில்லை,' என்றார்.
புஷ்பலதாவுக்கு ஆதரவாக மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி மற்றும் கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன் முற்றுகையிட்டு ஆக்ரோஷமாகப் பேசினர். உடனே, தி.மு.க., கவுன்சிலர்கள் கண்டித்து பேச இரு தரப்பிலும் காரசார விவாதம் நடந்தது. சில நிமிடங்களுக்குப் பின் அனைவரும் தங்கள் இடத்துக்கு திரும்பினர்.
தொடர்ந்து கூட்டம் நடந்த போது, புஷ்பலதா அதே நிலையில் தனது இருக்கையில் அமர்ந்திருக்க, மீண்டும் மேயர் அவரிடம், 'நாடகத்தை கலைத்து விட்டு சபைக்குள் அமருங்கள்.
இல்லாவிட்டால், வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்படும்,' என்று கடுமையாக பேசினார். இதனால், வெளியே சென்ற அவர், தன் உடலில் இருந்த கட்டுக்களை அகற்றி விட்டு மீண்டும் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மேயர் பேசுகையில், '30 வது வார்டில், 4வது குடிநீர் திட்டத்தில், 24மணி நேரம் குடிநீர் வழங்கும் வகையில் பணி நடக்கிறது. நீர் அழுத்தம் மற்றும் சப்ளை சோதனை அடிப்படையில் நடக்கிறது. இதனால், குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணி நடக்கிறது.
முழுமையாக முடிந்த பின், புதிய ரோடு போடப்படும். அதிகாரிகள் கண்காணித்து, ரோட்டில் மேடு பள்ளம் இல்லாத வகையில் உடனுக்குடன் சரி செய்யப்படும்,' என்றார்.