ADDED : ஜூலை 05, 2026 11:52 PM
திருப்பூர், ஜூலை 6–
திருப்பூரில் பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை சார்ந்தே இயங்கி வருகின்றன. நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ள தங்குமிடங்களுக்கு மின்வாரியம் வணிக ரீதியான மின் கட்டணத்தை வசூலிப்பதுடன், வீட்டு மின் இணைப்பு பயன்படுத்தினால் லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படுகிறது. பழங்கரை பகுதியில் அண்மையில் நடந்த ஆய்வில், 11 மின் இணைப்புகளை விதிமீறி பயன்படுத்தியதாக 4.12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையினர் கூறுகையில், ‘‘தொழிலாளர்கள் தங்கும் கட்டடங்களுக்கு வீட்டு மின் இணைப்புக்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும். 200 யூனிட் இலவச மின்சாரம் தேவையில்லை என்றாலும், குறைந்தபட்ச வீட்டு மின் கட்டண சலுகையை அரசு வழங்க வேண்டும்’’ என்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘குடும்பமாக தங்கினால் வீட்டு மின் இணைப்பு வழங்கலாம். ஆனால், பேச்சுலராக ஆறு பேருக்கு மேல் தங்கினால் வணிக மின் இணைப்பு அவசியம். அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
