ADDED : செப் 02, 2024 01:00 AM

திருப்பூரில் உள்ள இளைஞர்களுக்கு, ஏராளமான தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எந்தத் தொழிலாக இருந்தாலும், திட்டமிட்டு உழைத்தால், முன்னேற முடியும்; சொந்தக்காலில் நிற்க முடியும். என் தந்தை சாய ஆலை நடத்தி வந்தார்; நான் படித்து முடித்த போது, 2011ல், சாயத்தொழில் பிரச்னை அதிகம்.
சுற்றுச்சூழல் பாதிப்பு என்பதால், நான் வேறு தொழிலுக்கு மாற முடிவு செய்தேன். சில மாதங்கள், பனியன் நிறுவனத்துக்கு சென்று பணிகளை கற்றுக்கொண்டேன்.
பிறகு, வாஷிங் யூனிட் துவக்கி நடத்தினேன்; அது ஒத்துவரவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர் ஆலோசனைப்படி, பிரின்டிங் யூனிட் துவக்கி, கடந்த ஆறு ஆண்டுகளாக, வெற்றிகரமாக இயக்கி கொண்டிருக்கிறேன். 'டிஜிட்டல்' பிரின்டிங் வந்த பிறகு, இத்தொழிலில் உள்ள சிரமம் குறைந்துவிட்டது. ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆடைகளுக்கான பிரின்டிங் வாய்ப்பு கிடைக்கிறது.
இருப்பினும், பிரின்டிங் சேவைக்கான, 'ஜாப் ஒர்க்' கட்டணம் பெறுவதில் தாமதம் ஏற்படும் போது சோர்வு ஏற்படுகிறது. ஒரு தொழில் மட்டும் போதாது என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' தொழிலையும் செய்து வருகிறேன். கொரோனா தொற்றுக்கு பிறகு, தொழிலை விரிவாக்கம் செய்து வருகிறேன். பல்வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதால், இதன் மூலமாகவும் வருவாய் ஈட்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டேன்.