/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சணப்பை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
சணப்பை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 06, 2024 11:28 PM

உடுமலை:கோடை மழைக்கு பின், தென்னந்தோப்புகளில் பசுந்தாள் உரத்துக்காக சணப்பை விதைத்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், கடந்தாண்டு மழை இல்லாமல், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதிக வெப்ப நிலையால், மரங்களில், குறும்பல் உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, காய்ப்பு திறன் குறைந்தது.
மழை இல்லாததால், எவ்வித பணிகளையும் விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. கோடை மழைக்கு பின், தென்னை மரங்களுக்கு உரமிடும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, வட்டப்பாத்தியில், சணப்பை விதைத்துள்ளனர்.
பசுந்தாள் உரமாக பயன்படும் இச்செடிகள் பூத்ததும், மடக்கி உழுவதால், மண்ணுக்கும், மரங்களுக்கும் பல்வேறு சத்துகள் கிடைக்கிறது. ஆனால், சணப்பை விதைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
'தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததும், சணப்பையை மடக்கி உழும் பணிகளை மேற்கொள்வோம். இதனால், மண் வளம் அதிகரித்து, தேங்காய் மகசூலும் அதிகரிக்கும்,' என தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.