/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விசாரணைக்கு வரவழைத்து விரல் உடைப்பு'
/
'விசாரணைக்கு வரவழைத்து விரல் உடைப்பு'
ADDED : செப் 15, 2024 01:34 AM

பல்லடம்: பல்லடம் - தெற்குபாளையத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் 35; பனியன் தொழிலாளி. இவருக்கும், அருகில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இட பிரச்னை உள்ளது. இது தொடர்பாக பெண் அளித்த புகாரின் பேரில், அருண்பிரசாத்திடம் விசாரிக்க வேண்டி, பல்லடம் போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின் போது, தன்னை அடித்து துன்புறுத்தியதில், இடது கை சுண்டு விரல் உடைந்து விட்டதாக, அருண்பிரசாத், மனித உரிமை ஆணையத்தில் புகார் கூறியுள்ளார்.
அருண்பிரசாத் கூறியதாவது:
ஆக., 26ல், இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு, போலீசார் என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டேஷனில், போலீசார், பி.வி.சி., பைப் கொண்டு, கால் மற்றும் கைகளில் பலமாக அடித்தனர்.
தொடர்ந்து, 7 மணி நேரத்துக்கு பின், என்னிடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். போலீசார் அடித்ததில், எனது இடது கையில், சுண்டு விரல் முறிந்து விட்டது. விரல் முறிவுக்கு காரணமான, போலீசார் மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது தொடர்பாக பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் கேட்டதற்கு, ''இது குறித்த தகவல் வரவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்,'' என்றார்.