‘ஆரோக்கியமான விவாதங்கள் சமூக வளர்ச்சிக்கு அவசியம்’
‘ஆரோக்கியமான விவாதங்கள் சமூக வளர்ச்சிக்கு அவசியம்’
ADDED : செப் 06, 2026 07:31 PM
பல்லடம், செப். 7–
பல்லடம் ராயர்பாளையம் அறிவுத்திருக்கோவில் வளாகத்தில், தாய் அறக்கட்டளை சார்பில் இலக்கியக் கூடல் நிகழ்வு நேற்று நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.
மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் கனகராஜ், பல்லடம் தமிழ்ச் சங்க தலைவர் கண்ணையன் மற்றும் சக்தி அறக்கட்டளை தலைவர் மிருதுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
‘தமிழர் வாழ்வியல் நெறி’ என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் ஆறுமுகத்தமிழன் பேசியதாவது:
ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் மாற்றம் ஒரு நொடியில் நிகழலாம். ஆனால், ஒரு சமூகத்தின் மாற்றம் உடனடியாக நிகழாது. ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு, அது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுவதற்கு நீண்ட காலம் ஆகும்.
சமூகம் தன்னைத்தானே சுயபரிசீலனை செய்து, குறைபாடுகளை நீக்கி, நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியும். அவ்வாறே ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய வாழ்வியல் நெறிமுறைகள் உருவாகியுள்ளன.
எதிர்வாதம் செய்வதை குற்றமாக கருதும் சமூகம் முன்னேறாது. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கப்பட்டு, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்போதுதான் அந்த சமூகம் வளர்ச்சி அடையும்.
ஆட்சியாளர்கள் மக்களுக்கு நியாயமான முறையில் வரி விதிக்க வேண்டும்; அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகி செந்தில்குமார் நன்றி கூறினார்.
–––
இலக்கியக்கூடல் நிகழ்வில் ஆறுமுகத்தமிழன் பேசினார்.
