/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விழுந்தால் பாதாளம்; பதறுது நெஞ்சம்; உடையும் பாதாளச்சாக்கடை குழாய்; பராமரிப்பு தொழில்நுட்பத்தில் சிக்கல்
/
விழுந்தால் பாதாளம்; பதறுது நெஞ்சம்; உடையும் பாதாளச்சாக்கடை குழாய்; பராமரிப்பு தொழில்நுட்பத்தில் சிக்கல்
விழுந்தால் பாதாளம்; பதறுது நெஞ்சம்; உடையும் பாதாளச்சாக்கடை குழாய்; பராமரிப்பு தொழில்நுட்பத்தில் சிக்கல்
விழுந்தால் பாதாளம்; பதறுது நெஞ்சம்; உடையும் பாதாளச்சாக்கடை குழாய்; பராமரிப்பு தொழில்நுட்பத்தில் சிக்கல்
UPDATED : அக் 18, 2024 07:22 AM
ADDED : அக் 18, 2024 06:32 AM

நேற்றுமுன்தினம் காலை.
யூனியன் மில் ரோடு சந்திப்பு.
சாலை முழுக்க மழைநீர் பெருக்கெடுத்திருந்தது.
தனசேகர், 35 என்பவர் சென்ற பைக் திடீரென தடுமாறியது; தவறி கீழே விழுகிறார்; பைக் மாயமாகிறது; பைக் எப்படி மாயமானது என்று அதிர்ச்சியில் உறைகிறார்.
போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் விரைகின்றனர்.
பாதாளச்சாக்கடை பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 12 அடி ஆழக்குழியில் பைக் விழுந்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக, தனசேகர் தப்பினார்.
பைக்கைச் சிரமப்பட்டு எடுத்தனர். அந்த இடத்தில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பதைபதைப்பு
திருப்பூரில் சாலைகளில் ஆள் இறங்கு குழிகளுக்காக, பாதாளச்சாக்கடை மூடி அமைந்துள்ள இடங்களைப் பார்த்தாலே, பொதுமக்களைப் பதைபதைப்புக்குள்ளாக்கச் செய்திருக்கிறது இந்தச் சம்பவம். பல இடங்களில் மூடிகள் உரிய முறையில் மூடப்படாமல் உள்ளன. இந்த மூடிகள் அமைந்துள்ள இடங்கள் போதுமான 'வலிமை'யுடன் இல்லாததால், வாகனங்களில் செல்லும்போது பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மழைக்காலங்களிலோ, 'நம்மை பாதாள லோகம் செல்ல வைத்துவிடுமோ' என்று இன்னும் அச்சம் கூடுகிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகமோ, பொதுமக்களின் அச்சம் குறித்தெல்லாம் கவலையின்றி, அலட்சியத்துடன் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
திட்டச் செயல்பாடு
புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில், பாதாள சாக்கடை திட்டம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வார்டுகளில் செயல்பாட்டில் உள்ளது. அம்ரூத் திட்டத்தின் கீழ், இத்திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது.
சின்னாண்டிபாளையம் பிரிவு, எஸ்.பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தி, அவற்றில் சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக 610 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இரு சுத்திகரிப்பு மையங்கள் மூலம் தினமும் 8 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 37 கி.மீ., நீளத்துக்கு பிரதான குழாய்களும், 570 கி.மீ., நீளத்துக்கு கழிவுநீர் சேகரிப்பு குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்துக்காக 10 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ 75 ஆயிரம் வீட்டு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பிரதான குழாய்கள் மற்றும் சேகரிப்பு குழாய்கள் பதிப்பு பணி நிறைவடைந்து, வீட்டு இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. இந்த குழாய்களில் ஏறத்தாழ 10 ஆயிரம் இடங்களில் ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டத்துக்காக குழாய் பதித்த பகுதிகளில் பெருமளவு நான்காவது குடிநீர் திட்டத்துக்கான குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சிரமங்கள்
இரு திட்டங்களும் வெவ்வேறு ஒப்பந்த நிறுவனங்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு, ஆங்காங்கே சப் கான்ட்ராக்டர்கள் வாயிலாக பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக ரோடுகள் சேதமடைவதும், சேதமான ரோடு சீரமைப்பு செய்தவுடன் மற்றொரு பணிக்கு மீண்டும் ரோடு தோண்டப்படுவது; குழாய்களில் உடைப்பு ஏற்பட்டாலும், வீட்டு இணைப்பு வழங்குவதற்காகவும் மீண்டும் ரோடு தோண்டப்படுவது என நகரின் பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
பொதுமக்கள், ஏராளமான சிரமங்களைத் தினமும் சந்தித்து வருகின்றனர்.
உடையும் மூடிகள்
ஆள் இறங்கு குழிகளின் மூடிகள், ரோட்டில் செல்லும் வாகனங்களின் எடை தாளாமல் உடைந்து போவது அடிக்கடி பல இடங்களில் நடக்கிறது. சில இடங்களில் ரோடு மட்டத்துக்கும், ஆள் இறங்கு குழியின் உயரத்துக்கும் உள்ள உயர வித்தியாசம் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. விபத்துகளும் சகஜமாகிறது. செயலில் காட்டுங்கள்
ஆனால், இத்தகைய அச்சத்தைப் போக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு இல்லை. அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து, பாதாள சாக்கடை பராமரிப்பு தொழில்நுட்பத்தை சிறப்பாக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பு இல்லை
பாதாள சாக்கடை திட்டப் பணியில் உள்ள குளறுபடிகள், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மண்டல கூட்டங்களில் பல கவுன்சிலர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளோம். ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு என்பதே இல்லை. பணிகளை மேற்பார்வையிட உரிய அலுவலர்கள் இல்லை. எந்த திட்டப் பணிக்கு யார் பொறுப்பு என்ற விவரமும் இல்லை. யாரைக் கேட்டாலும் அடுத்தவரைக் கை காட்டும் நிலை உள்ளது. வார்டு பகுதிக்குள் மக்களிடம் இது குறித்து விளக்கம் தரமுடியவில்லை. மண்டலம் மற்றும் வார்டு வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தி பணிகளை தொய்வின்றியும், குறைகள் ஏற்படாத வகையிலும் மேற்கொள்ள வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறோம். இதை செய்தால் மட்டுமே சிறிதளவாவது இப்பிரச்னை தீரும். ஒப்பந்த நிறுவனங்களும் ஏராளமான தொகை நிலுவை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதற்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
- அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர்.
யூனியன் மில் ரோடு சந்திப்பு பகுதியில், உடைப்பு ஏற்பட்ட பாதாளச்சாக்கடை பிரதான குழாயை அகற்றி, வேறு குழாய் பொருத்தும் பணி நடக்கிறது.
கொங்கு மெயின் ரோட்டில் சில மாதம் முன் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. மற்றபடி பிரதான குழாய்களில் எந்த பிரச்னையும் இல்லை. ஆள் இறங்கு குழிகளின் மூடிகள் கனரக வாகனங்களால் சில இடங்களில் சேதமாகியுள்ளது. அவை உடனுக்குடன் மாற்றப்படுகிறது. ஊழியர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பிரதான குழாய்கள், சேகரிப்பு குழாய்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு விட்டது. தற்போது வீட்டு இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. ஒரு சில இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியும் நடப்பதால், குழிகள் நிரந்தரமாக மூடப்படாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குழாய் பதிப்பு முடிந்த பின்னர் இது போன்ற ரோடுகள் முழுமையாக சீரமைக்கப்படும். ஒப்பந்த நிறுவனங்கள், சப் கான்ட்ராக்டர்கள் இடையே சில இடங்களில் தகவல் பரிமாற்றங்களில் நிலவும் குழப்பங்கள் நிர்வாகத்தின் அறிவுரைப்படி தீர்வு கண்டு பணிகள் தொய்வின்றி நடக்கும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- மாநகராட்சி
அதிகாரிகள்.
ஒருங்கிணைப்பு இல்லை
ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு என்பதே இல்லை.
பணிகளை மேற்பார்வையிட உரிய அலுவலர்கள் இல்லை. எந்த திட்டப் பணிக்கு யார் பொறுப்பு என்ற விவரமும் இல்லை. யாரைக் கேட்டாலும் அடுத்தவரைக் கை காட்டும் நிலை உள்ளது. வார்டு பகுதிக்குள் மக்களிடம் இது குறித்து விளக்கம் தரமுடியவில்லை. மண்டலம் மற்றும் வார்டு வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தி பணிகளை தொய்வின்றியும், குறைகள் ஏற்படாத வகையிலும் மேற்கொள்ள வேண்டும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறோம். இதை செய்தால் மட்டுமே சிறிதளவாவது இப்பிரச்னை தீரும். ஒப்பந்த நிறுவனங்களும் ஏராளமான தொகை நிலுவை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதற்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
- அன்பகம் திருப்பதி, மாநகராட்சி
எதிர்க்கட்சித் தலைவர்.