ஆடிப்பட்டத்தில் பருத்தி சாகுபடிக்கு ஆர்வம் மானியம் வழங்கினால் குறையாது பரப்பு
ஆடிப்பட்டத்தில் பருத்தி சாகுபடிக்கு ஆர்வம் மானியம் வழங்கினால் குறையாது பரப்பு
ADDED : ஜூன் 19, 2026 08:50 PM
குடிமங்கலம்: ஆடிப்பட்ட சீசனில், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வகையில், வேளாண்துறை வாயிலாக, மானியத்திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில், பருத்தி சாகுபடி பரப்பில் உடுமலை முன்னிலை வகித்தது. பி.ஏ.பி., பாசனம், களிமண் பரப்பு, சாதகமான சீதோஷ்ண நிலை காரணமாக இப்பகுதியில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக, நீண்ட மற்றும் குறுகிய இழை பருத்தி ரகங்கள் பயிரிடப்பட்டது.
பி.ஏ.பி., திட்டத்தில் பாசன நாட்கள் குறைப்பு, நிலையில்லாத விலை, நோய்த்தாக்குதல் ஆகிய காரணங்களால், 1997ம் ஆண்டுக்குப்பிறகு, ஆயிரம் ஏக்கராக சாகுபடி சரிந்தது.
மத்திய பருத்திக்கழகம் சார்பில், சாகுபடி பரப்பை அதிகரிக்க, மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும் பலனில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, கடந்த, 2008ல், நுாற்பாலை நிர்வாகத்தினர், சாகுபடிக்கு, ஒப்பந்த முறையை அமல்படுத்தியதால், அந்தாண்டு, நுாறு ஏக்கர் வரை பருத்தி பயிரிடப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, போதிய விலை கிடைக்காதது உட்பட காரணங்களால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், குறைவாகவே பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், வரும் ஆடிப்பட்ட சீசனில், பருத்தி சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘கிராமப்புற பொருளாதாரத்தில், பருத்தி முக்கிய பங்கு வகித்தது. பல்வேறு காரணங்களால், கைவிடப்பட்ட பருத்தி சாகுபடியை, மீண்டும், மேற்கொள்ள ஆர்வமாக உள்ளோம். எனவே, தற்போதைய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விதைகளை மானியத்தில் வேளாண்துறை வாயிலாக வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
வரும் ஆடிப்பட்டத்தின் போது, திருமூர்த்தி அணையிலிருந்து, இரண்டாம் மண்டலத்துக்கு, தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அதையொட்டி, மானியத்திட்டத்தை செயல்படுத்தினால், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,’என்றனர்.
