ADDED : ஆக 01, 2024 12:47 AM
உடுமலை : புதிய ரக நிலக்கடலையை வேளாண்மை துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
மத்திய அரசின் தேசிய விதை கழகம், 'ஜி.ஜெ.ஜி - 32' என்ற புதிய ரக நிலக்கடலை ரகம் அறிமுகம் செய்துள்ளது. இதை வேளாண் துறையினர் திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடத்திலும் அறிமுகம் செய்துள்ளனர்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட திருப்பூர் மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது;
தேசிய விதை கழகம், புதிய ரக விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.
ஜி.ஜெ.ஜி., என்ற புதிய ரக விதையின் வாயிலாக விளைவிக்கப்படும் நிலக்கடலை செடியில், 90 காய்கள் பிடிக்கும். திருப்பூர், அவிநாசி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த புதிய ரக நிலக்கடலை விதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 110 நாளில் விளைச்சல் தரும் இந்த ரகத்தில் எண்ணெய் பிழிதிறன், 54 சதவீதம் வரை உள்ளது.
தேவைப்படுவோர் பெருமாநல்லுார் மற்றும் அவிநாசி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.