/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் நீர் நிற மாற்றத்துக்கு... சம்பந்தம் இல்லை! தெளிவுபடுத்தும் சாய ஆலை சங்கம்
/
நொய்யலில் நீர் நிற மாற்றத்துக்கு... சம்பந்தம் இல்லை! தெளிவுபடுத்தும் சாய ஆலை சங்கம்
நொய்யலில் நீர் நிற மாற்றத்துக்கு... சம்பந்தம் இல்லை! தெளிவுபடுத்தும் சாய ஆலை சங்கம்
நொய்யலில் நீர் நிற மாற்றத்துக்கு... சம்பந்தம் இல்லை! தெளிவுபடுத்தும் சாய ஆலை சங்கம்
ADDED : மே 28, 2024 12:47 AM
திருப்பூர்:மழைக்காலங்களில், நொய்யல் ஆற்றின் நீர் நிறம் மாறுவதற்கும், சாய ஆலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு ஜவுளி கேந்திரங்களில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் நடைமுறையில் இல்லை. திருப்பூரில் மட்டும், ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.
தினமும், 12 கோடி லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து, 10 கோடி லிட்டர் தண்ணீர் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. சேமிக்கும் சாய ஆலைகள் திருப்பூரில் மட்டுமே உள்ளன. இதில் உள்ள, பல்வேறு சிக்கல்கள் என்ன என்பதை, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் அறிக்கை:
நொய்யல் ஆற்றில், ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதில்லை; மழைக்காலங்களில் மட்டுமே மழை நீர் பாய்வதை பார்க்கிறோம். நாலைந்து மாதங்கள் மழையின்றி வறட்சியாக இருந்துவிட்டு, திடீரென மழை பெய்யும் பொழுது, ஆற்றில் தேங்கியிருக்கும் சாக்கடை கழிவு மழை நீரில் அடித்துச் செல்லப்படுகிறது.
சாக்கடை கலப்பதால், மழை நீரும், கருப்பாக மாறிவிடுகிறது. ஆற்றில் பல மாதங்கள் தேங்கி கிடக்கும் கழிவுகளின் தன்மையைப் பொறுத்து, ஆற்று தண்ணீரில் நிறம் மாற வாய்ப்புள்ளது.
பாதுகாப்பான பயணம்
பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, சாய ஆலைகளிலிருந்து, பாதுகாப்பாக பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலமாக சாயக்கழிவுநீர் எடுத்துசெல்லப்படுகிறது. திருப்பூரில் மட்டும், ஒன்பது பொது சுத்திகரிப்பு நிலையங்கள் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வளர்ச்சி பணிகள் நடக்கும் போது, எதிர்பாராத வகையில், சாயக்கழிவுநீர் செல்லும் குழாய் உடைபடுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சாயக்கழிவு நீர் அனுப்புவதை உடனே நிறுத்தி, இரண்டு மணி நேரத்துக்குள் குழாய் உடைப்பு சீரமைக்கப்படுகிறது.
நஞ்சராயன் குளம்
குழாய் சீரமைத்த பின்னரே, மீண்டும் சாயக்கழிவுநீர் குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும். நஞ்சராயன் குளத்தில், மழை காலத்தின் துவக்கத்தில் மீன்கள் இறந்து கிடப்பதற்கும், பல்வேறு வேதியியல் மாற்றங்களே காரணம் என்கின்றனர்.
புதிய மழையால் ஆற்றுக்குள் வரும் மழை நீரில், ஆக்ஸிஜன் அளவு மிக்க குறைவாக இருக்கும். அந்நீர் கலந்தவுடன், தண்ணீர் செல்லும் பகுதியில் உள்ள சிறிய மீன்கள் மட்டும் இறந்துவிடுவது வழக்கம். சில நாட்களில், குளத்து தண்ணீர் சமநிலை அடையும் போது, மீன்களுக்கு ஏற்றதாக மாறிவிடுகிறது.
மழைக்காலங்களில், நொய்யல் ஆற்று நீர் நிறம் மாறுவதற்கும், திருப்பூரில் செயல்படும் சாய ஆலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருப்பூரில் உள்ள சாய ஆலைகள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை முறையாக செயல்படுத்தி வருவதால், நிலத்தடி நீரை லாரிகள் மூலம் விலை கொடுத்து வாங்குவது நிறுத்தப்பட்டது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த, 15 ஆண்டாக, 500 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளின் ஓட்டம் திருப்பூரில் தடைபட்டுள்ளது. மேற்படி லாரிகள் வெளியேற்றும் புகையில் உள்ள கார்பன்--டை-ஆக்ஸைடு காற்றில் கலப்பதும் குறைந்துள்ளது.