/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடையில் கைகொடுக்கும் நிலப்போர்வை; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
/
கோடையில் கைகொடுக்கும் நிலப்போர்வை; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
கோடையில் கைகொடுக்கும் நிலப்போர்வை; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
கோடையில் கைகொடுக்கும் நிலப்போர்வை; மானியம் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 05, 2025 10:25 PM

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
கோடை காலத்தில், கிணறு மற்றும் போர்வெல்களில், தண்ணீர் வரத்து குறைந்து, சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், சாகுபடி பரப்பு குறைந்து, காய்கறி வரத்திலும் பாதிப்பு உருவாகிறது.
இந்நிலையில், காய்கறி சாகுபடிக்கென பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், அறிமுகப்படுத்தப்பட்டு, மானியத்திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், நுண்ணீர் பாசனம், நீர் வழி உரமிடுதல் உட்பட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் செயல்படுத்துகின்றனர். அதில், நிலப்போர்வை எனப்படும், 'மல்ஷிங் ஷீட்' தொழில்நுட்பமும் முக்கியமானதாகும்.
இத்தொழில்நுட்பத்தில், மேட்டுப்பாத்தி அமைத்த, 'ஷீட்' அதன் மேல் பரப்பப்படுகிறது. செடிகளுக்கு போதிய இடைவெளி விட்டு, துளைகளும், அதற்கேற்ப சொட்டு நீரும் அமைத்துக்கொள்ளலாம்.
இதனால், கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது; களைகளும் முளைக்காது; செடிகளுக்கு தேவையான தண்ணீர், வேரின் அருகிலேயே கிடைக்கும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடப்பு சீசனில், தர்பூசணி உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சின்னவீரம்பட்டி, குட்டியகவுண்டனுார், சின்னப்பன்புதுார் உள்ளிட்ட பல கிராமங்களில், விளை நிலங்களில் நிலப்போர்வை அமைக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், தோட்டக்கலைத்துறை சார்பில், 'மல்சிங் ஷீட்' அமைக்க, ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டும், இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த தோட்டக்கலைத்துறை வாயிலாக மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.