/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை தந்த இயற்கை கை கொடுத்தது மழை
/
பசுமை தந்த இயற்கை கை கொடுத்தது மழை
ADDED : ஜூன் 05, 2024 01:31 AM
உடுமலை;உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்ததால், பசுமை திரும்பியுள்ளது.
இந்த ஆண்டில், தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைந்து வந்தது. விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டன.
வறட்சி உச்சகட்டமாக, சில நாட்களுக்கு முன் தலையில் நெருப்பு வைத்தது போல், வெயிலின் தாக்கத்தை உணர முடிந்தது. இதனால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். உடுமலை, திருப்பூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்வெப்பநிலை, 107 பாரன்ஹீட் வரை பதிவாகியது. ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் வளர்ந்திருந்த புற்கள், காய துவங்கின.
ஆனால், இயற்கைக்கு நிகர் இயற்கையே தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மே இரண்டாவது வாரத்துக்கு பின் துவங்கியது மழை.
அவ்வப்போது இடி, மின்னலுடன் கனமழை, துாறல், நாள் முழுதும் மழைப்பொழிவு என மாறி, மாறி பதிவாகியதால், காய்ந்த, தீக்கிரையான நிலத்துக்கு மழைநீர் வரப்பிரசாதமாக மாறியது.
மழைநீர் தந்த பயனால், புற்கள் வளர துவங்கி, பசும்புல் மேலெழுந்தது. தற்போது, இருபுறமும், ரயில் பயணத்தின் போது ஜன்னல் ஓரங்களில் எங்கு திரும்பினாலும் பசுமை பரப்பு பளிச்சிடுகிறது. ரயிலில் செல்பவர் மட்டுமின்றி, அவ்வழியை கடந்து செல்வோர் பசுமையை ரசிக்கின்றனர்.