/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிரம்பி வழியும் குளம், குட்டை; ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி!
/
நிரம்பி வழியும் குளம், குட்டை; ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி!
நிரம்பி வழியும் குளம், குட்டை; ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி!
நிரம்பி வழியும் குளம், குட்டை; ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி!
ADDED : மே 26, 2024 05:17 AM

திருப்பூர் : 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கிராம ஊராட்சிகளில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்ட குளம், குட்டைகள், கோடை மழையில் நிரம்பி ததும்புகின்றன.'இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்' என, ஊராட்சி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், ஆண்டு சராசரி மழையளவு என்பது குறைவு தான். மாவட்டத்தில் உள்ள, 265 கிராம ஊராட்சிகளில் ஏராளமான குளம், குட்டைகள் உள்ளன. குறிப்பாக, அவிநாசி உள்ளிட்ட சில ஊராட்சிகளில், மிக அதிகளவு குளம், குட்டைகள் உள்ளன. மழைநீர் தான், பிரதான நீராதாரமாக உள்ள நிலையில், மழையளவு குறைவு என்பதால், 'போர்வெல்' அமைத்து நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்திலும் மழைப் பொழிவு அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மாநிலம் முழுக்க கிராம ஊராட்சிப்பகுதியில் உள்ள, குளம், குட்டைகளை துார் வாரி, சுத்தப்படுத்த, 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டது. 95 சதவீத கிராம ஊராட்சிகள் இப்பணியை சிறப்பாக செய்து முடித்தன; பல ஆண்டுகளாக துார்வாரப்படாத, சுத்தம் செய்யப்படாத குளம், குட்டைகள் கூட சுத்தம் செய்யப்பட்டன.
விளைவாக, மழையின் போது, அவற்றில் தண்ணீர் நிரம்பின.சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில், கோடை மழை பெய்து வருகிறது; அதிகபட்சம் அவிநாசி வட்டாரத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. மழையால், குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார் வாரப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன.
விழா எடுக்கும் மகிழ்ச்சி
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப கோரும் இயக்கத்தின் செயலாளர் பெரியசாமி கூறியதாவது;ஈரோடு மாவட்டத்தில், அதிகபட்சம், 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போதைய கோடை மழையால், வெப்பம் தணிந்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரி, சுத்தம் செய்யப்பட்ட குளம், குட்டைகளில், தற்போது பெய்து வரும் கோடை மழையால் நீர் நிரம்புகிறது, 30 முதல், 50 ஆண்டுகளில் நிரம்பாத குளம், குட்டைகள் கூட தற்போதைய மழையில் நிரம்ப துவங்கியிருக்கிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிடா விருந்து வைக்கும் அளவுக்கு கூட சில ஊர்களில் விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.
---
குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்ட குட்டையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இடம்: அவிநாசி ஒன்றியம், முறியாண்டம்பாளையம் ஊராட்சி, பனங்குட்டை.