ADDED : ஜூலை 04, 2024 05:01 AM

திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவர்கள், ரோட்டரி திருப்பூர், ரோட்டரி திருப்பூர் மிட்டவுன், ரோட்டரி திருப்பூர் பாரதி, ரோட்டரி திருப்பூர் பிரைடு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பாலிதீன் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் குமரன் நினைவகம் அருகே நடந்தது.
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:நாம் வீசியெறியும் பாலிதீன் நீர்நிலைகளில் கலந்து செல்கிறது; உலகளவில், 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 50 சதவீதம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக். இத்தகைய பிளாஸ்டிக் தான், இன்று மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் நலத்துக்கு பேராபத்தாக மாறியிருக்கிறது.
நாம் உண்ணும் உணவில் கூட, நுண்துகள்களாக பாலிதீன் கலந்திருக்கிறது என்பது பேரதிர்ச்சி தரும் உண்மை. இந்த நுண்துகளால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தான் அதிக ஆபத்து என, மருத்துவம் எச்சரிக்கிறது. நாம் குழந்தைகளுக்கு நீர் நிரப்பி கொடுத்தனுப்பும் பிளாஸ்டிக் பாட்டில்களை மாதம் ஒருமுறை மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ,மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பதாதை ஏந்தியும், நாடகம், நடனம் வாயிலாக, பாலிதீன் தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாநில அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை வலியுறுத்தினர். பின், ரோட்டரி அமைப்புகள் சார்பில் பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. ரோட்டரி நிர்வாகிகள் கார்த்திக், கிருத்திகா, சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவ பிரதிநிதி சுந்தரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், செய்திருந்தார்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தான், இன்று மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் நலத்துக்கு பேராபத்தாக மாறியிருக்கிறது