/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகேட்பு கூட்டத்தில் குறையாத மனுக்கள்
/
குறைகேட்பு கூட்டத்தில் குறையாத மனுக்கள்
ADDED : மார் 11, 2025 05:20 AM

திருப்பூர், : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 741 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, குறைகளை தீர்த்துவைக்கவேண்டியது துறை சார்ந்த அதிகாரிகளின் கடமை.
மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அம்மனுக்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டா இடம்அளவீடு தேவை
திருப்பூர் வடக்கு ஒன்றிய மா.கம்யூ., தலைமையில், ஈட்டி வீரம்பாளையம் பகுதி தர்ணாவில் ஈடுபட்டு மனு அளித்தனர். மனுவில், 'ஈட்டிவீரம்பாளையம் கிராமம், க.ச.எண். 544, அரசு புறம்போக்கு நிலத்தில், ஒன்றரை சென்ட் வீதம், 116 பேருக்கு, 1994ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பட்டா இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை உடனடியாக அளவீடு செய்து வழங்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.
தோண்டுகின்றனர்மூடுவதில்லை
மா.கம்யூ., திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் அளித்த மனு:
திருப்பூரில் குடிநீர், பாதாள சாக்கடை, தொலை பேசி, இணையதளம் என பல்வேறு தேவைகளுக்காக பிரதான சாலைகள் தோண்டப்படுகின்றன. பணிகளை முடித்து, உடனடியாக ரோடு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. இதனால், சாலை விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன.
மங்கலம் ரோட்டில், கருவம்பாளையம் மேற்கு பிள்ளையார் கோவில், பழகுடோன் ஸ்டாப் பகுதிகளில் ரோடு பழுதடைந்துள்ளது. ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே, பாலம் பணி, யுனிவர்சல் ரோடு சுரங்கப்பாதை, பார்க்ரோடு சுரங்கப்பாதை பணி, திருப்பூர் - காங்கயம் ரோடு, ராஜீவ் நகர் சிக்னல், ராக்கியாபாளையம் - செவந்தாம்பாளையம் ரோடு, காங்கயம் கிராஸ் ரோடு, பெரியகடை வீதி, புதுமார்க்கெட் வீதி என பல இடங்களில் ரோடு தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலைகளை விரைந்து சீரமைத்து, விபத்துகளை தடுக்க வேண்டும்.